அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளையாலான குடத்தைத் தலையில், வைத்துக் கொண்டு, மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம் இது. கும்பாட்டம் என்றும் இதனைக் குறிப்பிடுவர். பெரும்பாலும் நாட்டார் தெய்வ விழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படும். இக்கலை தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்பட்டாலும், தஞ்சை, திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெருமளவு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே இக்கலையை நிகழ்த்துகின்றனர். பொதுவாக நையாண்டி மேளக்காரர்கள் நிற்கின்ற உட்பரப்பு இடமே கரகாட்டக்கலைஞர்கள் ஆடும் ஆடுகளமாக இருக்கும், மரபுவழிக் கரகாட்டத்தில் நாடகப் பாணியைக் காண முடியும். தெம்மாங்குப் பாட்டிற்காக ஆடப்படும் ஆட்டத்தையும் மரபு வழி ஆட்டத்தினுள் அடக்குவர். இன்றைய காலகட்டத்தில் கரகாட்டத்துடன் சாகசக் கலையும் இணைந்துள்ளது.