உடுக்கை என்னும் தோலிசைக் கருவியை இசைத்துக் கொண்டே கதையைப் பாடி நிகழ்த்தும் கலை உடுக்கைப்பாட்டு. இசைக்கருவியால் இக்கலை பெயர் பெற்றுள்ளது. தமிழகத்தின் கொங்குப் பகுதியில் இக்கலை பெரிதும் நிகழ்த்தப்படுகிறது. ஒரு கலைஞரே இக்கதையை நிகழ்த்தும் வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. பல இடங்களில் மன்னர் போன்று வேடமணிந்து உடுக்கையடிப்பதுண்டு. அவருக்குத் துணையாக ஒரு பெண் அல்லது பெண் கலைஞர் துணைப்பாடகராக இடம் பெறுவார். கொங்கு மண்டலத்தில் மிகவும் அறியப்பட்ட அண்ணன்மார் சுவாமி கதை சடங்கியலாகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்துகின்றனர். இக்கதை வழிபாட்டிற்காக நிகழ்த்தும் போது பலர் சாமி வந்து ஆடுவர். பல நாள்கள் தொடர்ந்து இக்கலையை வழிபாட்டிடங்களில் நிகழ்த்துவதும் உண்டு. காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை, கோவிலன் கதை போன்ற கதைப் பாடல்களையும் உடுக்கடிப்பாட்டில் நிகழ்த்துகின்றனர்.