எஸ்_ராமகிருஷ்ணன்
2018 இல்- சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.
பிறந்த குழந்தையை தொட்டிலில் கிடத்தியதும் மண்ணை துணியில் முடிந்து தொட்டிலில் கட்டுவது நம் வழக்கம். அங்கே ஆரம்பிக்கிறது நமக்கும் நம் மண்ணுக்குமான தொடர்பு. மனிதனின் எண்ணம் செயல் பழக்கவழக்கம் என அத்தனையும் மண்ணின் மாண்பினை பொறுத்தே அமைகிறது.
கரிசல் நிலம் என்ற பெய்யும் ஓரிரு மழையில் தன்னை முழுவதும் நனைத்து ஈரத்தை பிரிய மனமில்லாமல் சேர்த்து வைத்துக் கொள்ளும். வெயிலில் மெல்ல மெல்ல காய்ந்து விரிசல் அடைந்து பாளம் பாளமாக வெடித்து நித்தமும் உரைத்து அடிக்கும் வெயிலின் உக்கிரத்தை உள்வாங்கி விவசாய மக்களின் வியர்வையில் தொண்டையை நனைக்கும் மண்.
கரிசல் நிலத்தில் நாதஸ்வர இசையை நாதஸ்வர கலைஞர்களை அவர்களின் வாழ்க்கைத்துயரைப் பேசுகிறது இந்த நாவல். வாழ்நாளில் மனிதன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கருவேலி முளைத்து நிறைந்துவிடும் கரிசலில். இப்படியான மண்ணில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்கள். பெரும்பாலும் இம்மண்ணின் மைந்தர்கள் கண்டது என்னவோ விவசாயத்தில் நட்டமும், பஞ்சமும் ,பட்டினியும் மட்டுமே இவர்களின் நிலையே இப்படி எனில் இதில் வாழும் கலைஞர்களின் வாழ்வியலை, அவர்களின் கலை தாகத்தை, ஏக்கத்தை , துயரத்தை பக்கிரி என்ற கதாபாத்திரம் மூலம் நமக்கு விவரிக்கிறார் ஆசிரியர்.
கதையின் முதல் வரி அடியில் ஆரம்பிக்கிறது.
” முதல் அடி ரத்தினத்தின் பிடரியில் விழுந்தது”
மூதூருக்கும் பனங்குளத்துக்கும் நடுவில் இருக்கிறது சூலக் கருப்பசாமி கோவில். சாமிக்கு யார் வில் கொடுப்பது என்ற பிரச்சனை ஊர் மக்களிடையே எழுகிறது இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் திருவிழா மனிதர்களின் இயல்பை மாற்றி விடுகிறது. அடக்கமாக இருந்த மனிதன் கூட கூட்டத்தை கண்டால் மாறிவிடுகிறான். சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தவனைப்போல கூச்சல் இடுகிறான், இடித்து தள்ளுகிறான், வேஷ்டி தரையில் புரள குடித்துவிட்டு ஆடுகிறான். ஆண்களை திருவிழா மூர்க்கமாகி விடுவதை போல பெண்களை பேரழகிஆக்கிவிடுகின்றன. புது மணப்பெண்கள் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக கைகளைக் கோர்த்துக்கொண்டு சுற்றுவது என புது பெண்கள் திருவிழாவிற்கு அழகூட்டுகிறார்கள்.
ரத்தினத்திற்கு வயது நாற்பத்தி ஐந்து ஆறடிக்கும் அதிகமான உயரம். நெற்றி நிறைய திருநீறு எண்ணெய் தடவி வாரி நீண்ட தலைமுடி சில்க் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்திருந்தார். அவரது இரண்டு கைகளிலும் மோதிரங்கள் மினிங்கின எதுவும் தங்க மோதிரம் இல்லை, அலங்காரத்திற்கு வாங்கிய கல் மோதிரங்கள் .அடிவாங்கிய வலியை மறைப்பது போல வலதுகையால் கழுத்தை தடவி விட்டபடியே சின்னுவை முறைத்துக் கொண்டிருந்தார் பக்கிரி இரும்பு அடிப்பவன் போல ஆள். உறுதியான உடற்கட்டு தலைமயிர் படியாமல் நிமிர்ந்து நிற்கும். நாயனம் வாசிப்பவர்கள் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக வழித்து விட்டிருந்தான். இடது கையில் தங்கநிற வாட்ச் நெற்றியில் கீற்றாக திருநீறும் குங்குமமும் .சிவாளிக் கயிறுகள் அவன் மடியில் விழுந்து கிடந்தன. இதையெல்லாம் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை நம் கண்முன் காட்டுகிறது.
இரு கிராமங்களின் பிரச்சனையில்
” இன்னும் என்னத்துக்குடா உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க ? செரைக்கவா “
எழுந்து கிளம்புங்க என திட்டினான் சின்னு. இந்த வார்த்தைக்கு பக்கிரி சின்னுவை அடித்துவிட பதிலுக்கு ஊர்மக்கள் இருவரையும் அடித்து துவைத்து மரத்தில் கட்டிவிடுகிறார்கள். நடுஇரவில் பூசாரி இருவரையும் விடுவித்தார். பக்கிரி அந்த மனிதர்களின்மேலுள்ள கோபத்தையும் சாதி இழிவையும் பொறுக்காமல் அங்கே உள்ள கொட்டகையில் தீயை வைத்துவிட்டு லாரியில் ஏறி கண் மறைவானார்கள்.லாரி பயணம் அவனுக்கு பழைய கதைகளை வளர்ந்த நிலைகளை நினைவில் கொண்டு வந்தது.
தேர்தல் காலம் அரசியல்காரர்களைவிட கிராமியக் கலைஞர்களுக்கு மவுசு அதிகம். அப்படியான ஒரு நேரத்தில் தலைவரின் வருகைக்கு இவர்கள்அலைக்கழிக்கப்படுவதும், கேவலப்படுவதும் ,பேசிய கூலியை தராமல் ஏமாற்ற படுவதும் அதனால் இவர்களின்கடன் சுமை ஏறுவதும் மனதை கனக்கச் செய்யும்.
லாரி ஓரிடத்தில் நிற்க அங்கே எதிர்பாராமல் இடவல ஜமீனை பார்ப்பதும் இவர்கள் சாப்பாட்டிற்கு அவர் பணம் கொடுப்பதும் நடந்தது .அந்த கால மனிதர்கள் வாத்தியக்காரர்கள் மதிக்கும் பண்பு நெகிழச் செய்யும். தற்போதைய ஜமீன்தாரரின் தாத்தா கருணாகர பூபதிக்கு 100 குதிரைகள் ஒரு மலையும் சொந்தமாக இருந்தன. ஒரு வேட்டைக்குச் சென்றபோது கடம்பி என்ற மலைசாதி பெண்ணோடு வாழ்ந்தார் .ஒரு நாள் மலையில் இருந்து தப்பிய ஊருக்கு வந்தபோது அவரை யாருக்கும் அடையாளம் தெரியாமல் போனது ஏனெனில் அவர் வயதானவராக இருந்தார் .ஆனாலும் கடம்பியின் ஞாபகம் அவரை வாட்டியது. அந்த பெண்ணை தேடிய போது எங்கள் இனத்தில் அப்படி ஒரு பெண் இல்லவே இல்லை என்றார்கள் கடைசியில் அது வன யட்சி என்றார்கள். அப்படியான ஒரு ஜமீனில் இவர்கள் ஒரு தடவை நாயனம் வாசித்தார்கள் அதற்கு சன்மானமாக வெள்ளைக்காரன் கொடுத்த பதக்கங்களை பரிசாகக் கொடுத்தனர் இப்படியான கதைக்குள் கதையும் பயணிக்கிறது.
கொடுமுடியில் பத்ரியின் அக்கா வீட்டில் இருவரும் தங்கியபடி பொழுதை கழித்தனர். திருவிழாவில் பக்கிரி வைத்த நெருப்பிற்கு ஐந்து ,ஆறு சாவும் அதனால் இரு கிராமத்து மக்களுக்கும் சண்டை வலுத்து கலவரம் மூண்டது அதில் பெருவாரி விலங்குகளும் மனிதர்களும் இறந்தனர்.
ரத்தினம் மனைவி ரத்தினத்திற்கு போன் பேச அதில் போலீஸ் தேடி வந்ததாக விவரம் கூறினாள் .ரத்தினமும் போலீசுக்கு பயந்து பக்கிரி பிரிந்து சென்னை சென்று அங்கும் நிம்மதியின்றி குடும்பத்து நினைவுடன் வாடினார் . ஒருநாள் அவர் மனைவி குழந்தைக்கு தேள் கடித்து மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக சொன்னதும் சொந்த ஊருக்கு திரும்பினார் ரத்தினம் .அங்கேயே காத்திருந்த போலீஸ் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பக்கிரியோ ரத்தினத்தை பற்றி எதுவும் தெரியாமல் பாயில் படுத்தபடியே கரகாட்ட குழுவிற்கு உதவியாக ஒருநாள் வாசிக்கச் சென்றதும் அங்கே கரகாட்ட பெண் உடன் லயித்துக்கிடந்ததும் , தந்தை உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு ஊசலாடுவதும் கிராமத்து நினைவுகள் அவனிடம்கரிசல் நிலம் போல காய்ந்து கொண்டு இருந்தது . அப்படியான நிறைய அனுபவங்களில் வெளிநாடு போய் நான் வாசித்த அனுபவம் உதட்டில் புன்முறுவல் பூத்தாலும் மனதில் கசந்த நிகழ்வும் வந்து போனது. வெளிநாட்டு நிகழ்ச்சிக்காக கடன் வாங்கி உடுப்பு வாங்கியது. மீனம்பாக்கம் ஆகாய விமான பயணம் அவர்களுக்கு வியப்பளித்தது. அயல்நாட்டில் குளிர் தாங்காமல் ரத்தினத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட மற்றவர்கள் பாட்டில் சரக்கு ஒரேயடியாக குடித்துவிட்டு பகல் முழுவதும் தூங்கி எழுந்தது. இவர்கள் வாசித்த நாயனத்தை ரசிக்க ஆளில்லை என்ற கவலையோடு ஊர் திரும்பினர் .சம்பளம் எல்லாம் டிக்கெட்டுக்கும் ரத்தினத்தின் ஆஸ்பத்திரி செலவிற்கும் சரியாகிவிட்டது என அவர்களை ஏமாற்றி விடுவது கலைஞர்களின் உண்மையான வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறார்.
மேலும் கண் தெரியாத தன்னாசி வித்துவான் தாசி அவனுக்கு கட்டிய சமாதி கோவில், ஊர் மாறிச்சென்று வேறுவழியின்றி அங்கே உள்ள கோவில் முன் வாசிப்பதும் அங்குள்ள ஜனங்கள் மூட்டை மூட்டையாக சோளம் கம்பு கொடுப்பதும், கிராமத்தில் மழை இல்லாமல் கடைசி காளை மாடுகளை வித்து அந்த காசை வாங்காமல் கோயில் உண்டியலில் போடச் சொல்லும் பெருமாள் நாயக்கர், நாதஸ்வரம் வாசிக்கும் அத்தனை வித்வான்களும் பயப்படும் ஊமை ஐயர் போன்ற கதைகள் சோளத்தட்டையாக இனிக்கின்றது.
வரலாறு கதையாக மாலிக்கபூர் பல்லாயிரம் பேர் கொண்ட படையுடன் அரட்டானம் சிவன் கோயிலில் முற்றுகையிட்டான் .விசயமறிந்து கோவிலின் வைடூரியங்கள் சிலைகள் யாவும் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டன. கோவிலின் மரக்கதவை திறக்க இயலாமல் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே செல்ல அங்கே ஒரு சங்கீதம் கசிந்து உருகி வழிந்தது .மாலிக்கபூர் இதற்கு முன் இப்படி ஒரு இசையை கேட்டதே இல்லை. அது என்ன இசை என சௌக்கத் அலியிடம் கேட்க அவனும்
“இசைதான் கடவுளோடு பேசும் மொழி ” எனச் சொன்னார் .
நாயனம் வாசித்துக்கொண்டிருந்த லச்சய்யாவிடம் மாலிக்கபூர் ” உன் கடவுளுக்கு காது இருக்கிறதா ? இசை கல்லிற்கு கேட்குமா? ” என கேள்வி கேட்க ..நிச்சயம் கேட்கும் என சொல்லிவிட்டு நாதஸ்வரம் வாசிக்கலானார் .அங்கிருந்த கல்யானை சிலையின் காது மெதுவாக அசைந்தது.வடக்கே செல்லும் போது லச்சய்யாவைகூட்டிச்சென்று டெல்லியில் உள்ள பாதுஷா கில்ஜிக்கு இசையை பரிசளித்தார் .லச்சய்யா குடும்பத்தை பிரிந்த சோகத்தை இசையில், இசையின் மூலம் ஒவ்வொரு நாளும் படர விட்டார். இதில் மாலிக் மனமாற்றம் அடைந்து கில்ஜியை கொன்று அரியனை ஏறினான் பின் மாலிக்கும் அரியனை சண்டையில் உயிர் இழந்தான். ஹக்கீம் என்பவன் லச்சய்யாவை குதிரையில் ஏற்றிவிட்டு உன் நிழல் கூட இங்கு படக் கூடாது என எச்சரித்து ஊருக்குஅனுப்பினார்.லட்சய்யா யமுனை ஆற்றில் கொல்லப்பட அதன் பிறகு நாதஸ்வர இசை வட இந்தியாவில் ஒலிக்கவே இல்லை.
பக்கிரியை கொடுமுடிக்கு வந்த போலீசார் பிடித்துச் சென்றனர் .போகும் வழியில் அவனுக்கு பிடித்த பாடல் பேருந்தில் ஓடியது வெளியே மயில் தோகை விரித்து ஆடியது பஸ்ஸில் நகர்ந்தவாறு கண்ணுக்குள் நிலத்தை நிரப்பியபடி சென்றான்.
கரிசலில் எப்போதும் ஒளிரும் வெயில் போல கதையும் மிளிர்கிறது.
உஷா கனகு