தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனர்- இலக்கியப் பேராசான் ப. ஜீவானந்தம். குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பட்டத்தார்- உமையம்மை ஆகியோருக்கு 1907 ஆகஸ்ட் 21ஆம் நாள் பிறந்து, சொரிமுத்து என்ற இயற்பெயர் கொண்டு பின்னர் ஜீவா என அழைக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே பள்ளி மாணவர் தலைவனாகத் திகழ்ந்தார். சாதி வேற்றுமை பாராத சமத்துவப் பார்வையுடன் மாணிக்கம் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த தனது நண்பனை சிவன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஊராரின் கண்டனத்திற்கு ஆளானார். கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே காந்தி வாசக சாலை, விவேகானந்தர் கால்பந்தாட்டக் குழு ஆகிய சிறார் அமைப்புகளை உருவாக்கினார்.
தனது தீவிரச் செயல்பாடுகளுக்கு தந்தை தடை போட்டதால் வீட்டை விட்டு வெளியேறினார்.
1924இல் பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம், 1926இல் சுசீந்திரம் தாணுமலையான் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் எனத் துவங்கி சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் நடத்திய ஆசிரமத்தில் சாதிப் பாகுபாட்டுடன் உணவு வழங்கப்பட்டதை எதிர்த்துப் போராடி வெளியேறினார்.
பிறகு காரைக்குடி அருகே சிராவயலில் 1927இல் காந்தி ஆசிரமம் நிறுவி ஏழை மாணவர்களுக்கு சாதி வேற்றுமை பாராமல் கல்வி புகட்டினார்.அங்குதான் புகழ்பெற்ற காந்தி-ஜீவா சந்திப்பு நிகழ்ந்து.
1929இல் மதுவிலக்குக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டமெங்கும் தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். 1930இல் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
தொடந்து, தமிழ்நாடெங்கும் சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்புவதில் ஈடுபடுகிறார். கூடவே, தேசவிடுதலை பெண்விடுதலை லட்சியங்களை மேடைகளில் முழங்குகிறார்.
1932 சட்ட மறுப்பு இயக்கப் பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். சிறை மீண்ட ஜீவா, சிங்காரவேலர், பெரியாரோடு சேர்ந்து சமதர்மக் கருத்துகளை மக்களிடையே பரப்புகிறார். 1932இல் சிங்காரவேலர், ஜீவா இணைந்து தயாரித்த ஈரோட்டுத் திட்டத்தை பெரியார் ஏற்கிறார். பின்னர், நீதிக்கட்சித் தலைவர்களின் எதிர்ப்பால் பெரியார் அதைக் கைவிடுகிறார்.
1934இல் “நான் ஏன் நாத்திகனானேன்” என்ற பகத்சிங் எழுதிய நூலை ஜீவா மொழியர்த்து குடியரசுப் பதிப்பகம் வெளியிட, ஜீவா கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிறார். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிலாளர் போராட்டம், கோவை லட்சுமி மில் தொழிலாளர் போராட்டம், நெல்லை விக்ரமசிங்கபுரம் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம், பசுமலை மகாலட்சுமி மில் போராட்டம் என உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர்களில் முன்னிற்கிறார்.
பெரியாரிடமிருந்து பிரிந்த ஜீவா, திருச்சியில் சுயமரியாதை சமதர்மக் கட்சியைத் தொடங்குகிறார். அதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேயின் ஆலோசனையை ஏற்று, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைகிறார்.1936இல் சேலம் மாநாட்டில், அதன் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜமீன் ஒழிப்புத் தீர்மானத்தை ஆதரித்து ஆவேசமாகப் பேசி எழுச்சியூட்டுகிறார். 1939இல் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காகக் கைதாகிறார். மாநிலத்தை விட்டே நாடு கடத்தப்பட்டு புதுவை, பம்பாய் என அலைக்கழிக்கப்படுகிறார். பம்பாயில் மீண்டும் கைதாகி வேலூர் சிறைக்கு கொண்டு வரப்படுகிறார்.
விடுதலைக்குப்பின் தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை முழுவீச்சுடன் கட்டியமைக்கும் பணியில் எஸ்.வி. காட்டே, பி. ராமமூர்த்தி, சுந்தரய்யா, ஏஎஸ்கே, பி. சீனிவாசராவ், வ. சுப்பையா ஆகியோருடன் இணைந்து பாடுபடுகிறார். 1937இல் “ஜனசக்தி” இதழ் தொடங்கப்படுகிறது. ஜீவா அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, உணர்ச்சியூட்டும் கட்டுரைகளை எழுதுகிறார். மகாகவி பாரதியையும் கம்பனையும் மானுடத்தைப் போற்றிய கவிகளாக மக்களிடையே கொண்டு செல்கிறார்.
காரைக்குடி கம்பன் விழா, எட்டயபுரம் பாரதி விழாக்களில் முழங்கி முத்திரை பதிக்கிறார். விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கையை வென்றெடுப்பதில் ஜீவாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
1952இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தமிழுக்கும் தமிழருக்கும் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
1958இல் மக்களுக்கான படைப்புகளுக்கு இடமளிக்கும் “தாமரை” இதழை 1958இல் தொடங்குகிறார். இடையறாத பிரச்சாரப் பயணங்களுக்கிடையே, ஜீவாவின் எழுத்துப் படைப்புகளும் வெளியாகின.
பாரதி பற்றி, மொழி பற்றி, புதுமைப்பெண், மதமும் மனித வாழ்வும், கலையும் இலக்கியமும், இலக்கியச் சுவை, சோசலிஸ்ட் தத்துவங்கள், கம்பன் கண்ட தமிழகம், இலக்கியத்தில் சோசலிஸ்ட் எதார்த்தவாதம், கம்பனும் பாரதியும், பாரதி பாடல்கள், ஜீவாவின் பாடல்கள் ஆகியன அவரது நூல்கள்.
ஜீவாவின் மகத்தான பங்களிப்பான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1961இல் கோவையில் கால்கோளிடப்பட்டது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தடம் பதித்த இலக்கியப் பேராசான் ஜீவா 1963 ஜனவரி 18இல் அவரது 56ஆவது வயதில் காலமாகி, வரலாறாய் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்